ஸ்லோ ஓவர் ரேட்; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனுமூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்க்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சாய் சுதர்ஷன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில், அந்த அணி மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் 20ஆவது ஓவரில் கூடுதல் ஃபீல்டரை 30யார்ட் வடத்திற்குள் நிற்க வைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது முறையாக இந்த தவறை செய்வதன் காரணமாக, சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக செயல்பட்டிருந்த ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே தற்சமயம் சஞ்சு சாம்சனுக்கு அதிக அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.