ஐபிஎல் 2025: சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளே ஆஃப் கனவை கலைத்த சன்ரைசர்ஸ்!

Updated: Mon, May 19 2025 23:32 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.

லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்க கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துகொடுத்தனர். மேற்கொண்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களுடைய அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். 

அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்திருந்த மிட்செல் மார்ஷ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களில் ஐடன் மார்க்ரமும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி 3 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த பூரன் - சமத் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இறுதியில் அதிரடியாக விளையாட முயற்சித்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பைன் ஷர்தூல் தாக்கூர் மற்றும் அப்துல் சமத் ஆகியோரும் விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் ஆகாஷ் தீப் சிக்ஸர் அடித்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்துள்ளது. சன்ரைசர்ஸ் தரப்பில் ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அத்ரவா டைடே மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதர்வா டைடே 13 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த அபிஷேக் சர்ம - இஷான் கிஷான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின்னர் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்த கையோடு அபிஷேக் சர்ம விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் கமிந்து மெண்டிஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரையும் உயர்த்தினர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் 32 ரன்களைச் சேர்த்த கையோடு கமிந்து மெண்டிஸ் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினாலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை