ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை 10 அணிகளுக்கும் அனுப்பியுள்ளது பிசிசிஐ. அந்தப் பட்டியலில் கிறிஸ் கெயிலின் பெயர் இடம்பெறவில்லை. 

Advertisement

ஐபிஎல் 2021 தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில், கடந்ட்தாண்டு 10 ஆட்டங்களில் விளையாடி 193 ரன்கள் எடுத்தார். திடீரென ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலக முடிவெடுத்து கரோனா தடுப்பு வளையத்தை விட்டு வெளியேறினார் கெயில். 

Advertisement

டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதில் கவனம் செலுத்த வேண்டும். இதனால் துபாயில் நான் இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஓய்வளிக்க சம்மதம் தெரிவித்த பஞ்சாப் அணிக்கு நன்றி என்று கூறினார்.

டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு எடுத்ததையடுத்து கெயிலும் ஐபிஎல்-லில் இருந்து விலகியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு அதிகமாக உழைத்த வெளிநாட்டு வீரர்களில் முதல் இரு இடங்களை டி வில்லியர்ஸுக்கும் கிறிஸ் கெயிலுக்கும் வழங்கலாம். 

அந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய இருவரையுமே ஐபிஎல் 2022 போட்டியில் காண முடியாது என்பது வருத்தமான விஷயம் தான். ஏலப் பட்டியலில் கெயில் பெயர் இல்லாத தகவலை அறிந்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

ஐபிஎல் தொடரில் இதுவரை 142 ஆட்டங்களில் விளையாடி 4965 ரன்கள் எடுத்துள்ளார் கெயில். அவரது ஸ்டிரைக் ரேட் - 148.96. மேலும் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் (6), அதிக சிக்ஸர்கள் (357) அடித்தவரும் கெயில் தான். அதிலும் கடந்த 2013ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக கெயில் அடித்த 175* ரன்கள் தான் இன்றைக்கும் ஐபிஎல்-லில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 7ஆம் இடத்தில் உள்ளார். 

Advertisement

கடந்த 2008ஆம் ஆண்டு கொல்கத்தா அணி கெயிலை முதல்முதலாகத் தேர்வு செய்தது. காயம் காரணமாக அப்போது ஓர் ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. 2009இல் தில்லி அணியில் அறிமுகமானார். அதன்பின் 2011இல் ஆர்சிபி அணிக்குத் தேர்வானார். அதிலிருந்து கெயிலின் தனித்துவமான டி20 திறமையை உலகம் அறிய ஆரம்பித்தது. 

முதல் ஆட்டத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் எடுத்தார். 2018இல் கெயில் - ஆர்சிபி கூட்டணி பிரிந்தது. 2021 வரை பஞ்சாப் அணிக்காக கெயில் விளையாடினார். ஐபிஎல் 2022 போட்டிக்காக இரு வீரர்களை மட்டும் தக்கவைத்த பஞ்சாப் அணி, கெயிலைத் தக்கவைக்கவில்லை. இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதை கெயில் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில், தனது கடைசி ஆட்டத்தைச் சொந்த ஊரான ஜமைக்காவில் விளையாட விருப்பம் தெரிவித்தார். கரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு ஜமைக்காவில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை கெயில் முடித்துக்கொள்ளவுள்ளார். தற்போது 42 வயதாகும் கிறிஸ் கெயில் வெஸ்ட் இண்டீஸுக்காக 103 டெஸ்டுகள், 301 ஒருநாள், 79 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News