இரானி கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் அசத்தல் சதம்; ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிதான ஆட்டம்!

Updated: Thu, Oct 03 2024 20:44 IST
Image Source: Google

இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கும், இந்திய அணிக்காக விளையாடிவரும் மற்ற அணிகளில் உள்ள சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையில் இரானி கோப்பை என்ற போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான இரானி கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இப்போட்டியில் கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது சர்ஃப்ராஸ் கானின் இரட்டை சதத்தின் மூலமும், அஜிங்கியா ரஹானே மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 537 ரன்களைக் குவித்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 223 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேசமயம் அஜிங்கியா ரஹானே 97 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 57 ரன்களையும் சேர்த்தனர். ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன் - சாய் சுதர்ஷன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிமன்யூ ஈஸ்வரன் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷன் 32 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய இஷான் கிஷானும் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், 38 ரன்களில் அவரும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஒருபக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிமன்யூ ஈஸ்வரன் தனது 150 ரன்களையும் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடி வரும் துருவ் ஜூரெலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களை எட்டியது. 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள அபிமன்யூ ஈஸ்வரன் 151 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை அணி தரப்பில் மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டுகளையும், ஜுனேத் கான் மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோர் தலா ஒரு இக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை