சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் - இர்ஃபான் பதான்!

Updated: Sat, Jun 24 2023 17:18 IST
Irfan Pathan wants Sanju Samson to be given extended run in Indian ODI team (Image Source: Google)

அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சென்று மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கும் இந்திய அணியின், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் இடம் பிடித்தார். கே எல் ராகுல் காயம் காரணமாக அணியில் விளையாடாததால் இந்த இடம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் முக்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கி குணமடைந்து வருவதால் சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்த பட்டியலில் சில மாதங்களுக்கு முன்பு சேர்த்தது. அதேசமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கான இடம் எப்படியானது? நிரந்தரமா இல்லை தற்காலிகமா? என்று பல கேள்விகள் இருக்கின்றது. இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “ரிஷப் பந்து தொடர்ந்து குணமடைந்து வருவதால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. 

சிறந்த மிடில் ஆர்டர் மற்றும் சிறந்த முறையில் சுழற்பந்துவீச்சை விளையாடக்கூடியவர் என்பதால், அவர் கூடுதல் மதிப்பு மிக்க வீரராக இந்த நேரத்தில் இருப்பார். அவரது பேக் புட் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரில் கட், புல், பிக்கப் மற்றும் பந்துவீச்சாளர்களின் தலைக்கு மேல் அடிப்பது என்று அவர் சிறப்பான ஷாட்களை கொண்டிருந்தார். 

ஆஸ்திரேலியா மாதிரியான ஒரு நாட்டிற்கு செல்லும் பொழுது இதுவெல்லாம் தேவை. சஞ்சு சாம்சனிடம் இப்படியான திறமைகள் நிறைய இருக்கிறது. அவர் இதை எல்லாம் பயன்படுத்தி மிகச்சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன். எனவே இந்தக் காலகட்டத்தில் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுத்தால் அவர் ரன்கள் எடுப்பார்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை