ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் குறித்த பேச்சுகள் தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஏனெனில் இந்திய அணியில் விளையாடும் சில வீரர்கள் சர்வதேச தொடர்களையும் புறக்கணித்து ஐபிஎல் தொடருக்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இந்திய அணியின் சில முக்கிய வீரர்கள் பிசிசிஐயின் எதிர்ப்பையும் மீறி இதனைச் செய்துவருவதுதான் ஆச்சரியமான விஷயம்.

Advertisement

ஏனெனில் இந்திய அணி கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் அடங்கும். அத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இஷான் கிஷான் பணிச்சுமை காரணமாக தொடரிலிருந்து விலகினார். ஆனால் பணிச்சுமையை காரணம் காட்டி அணியிலிருந்து வெளியேறிய அவர் அதன்பின் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது சர்ச்சையானது. 

Advertisement

இதனைத்தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் பிசிசிஐ அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இஷான் கிஷன் இந்திய அணியில் இடம்பிடிக்காத பட்சத்தில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் பிசிசிஐ மறைமுகமாக கட்டளை விதித்திருந்தது. ஆனால் அவரோ பிசிசிஐயின் எச்சரிக்கையையும் மீறி, ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், இந்திய வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரைத் தவிர்ப்பது குறித்து பிசிசிஐ செயலர் ஜெய் ஷா சமீபத்தில் பேசுகைமையில், “உடற்தகுதி உடையவர்கள் நிச்சயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். இது மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும். வீரர்கள் தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்யமுடியாது. அணித் தேர்வாளர்கள்தான் முடிவெடுப்பார்கள்” என்று மறைமுக எச்சரிக்கையை வீரர்களுக்கு கொடுத்திருந்தார். 

இந்நிலையில் தான் தற்போது இஷான் கிஷான் வரிசையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் பிசிசிஐயின் எச்சரிக்கையை மீறியுள்ளார். அதாவது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டு போட்டிகளிலும் சோபிக்க தவறியதால் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடவும் பிசிசிஐ சார்பில் அறிவுறுத்தப்பட்டார். 

ஆனால் அவர் தனக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக கூறி நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து சமீபத்தில் விலகினார். ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு தலைவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை என்று, அவர் விளையாட முழு உடற்தகுதியுடன் தான் உள்ளார் என்றும் கூறி ஸ்ரேயாஸின் தவறான தகவலை அம்பலப்படுத்தினார். 

Advertisement

இதனால் கோபமடைந்துள்ள பிசிசிஐ, ஐபிஎல் தொடருக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பங்கேற்காமல் இருந்து வரும் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அகியோரின் மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்கள் பிசிசிஐ ஒப்பந்ததிலிருந்து விலக்கப்படுவதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதும் கேள்விகுறியாக மாறியுள்ளது. 

மேலுல் தொடர்ந்து பிசிசிஐயின் எச்சரிக்கையை மீறியுள்ள இவர்கள் இருவரையும் தடை செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக பிசிசிஐ மத்திய ஒப்பந்த வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பட்டியளிலும், இஷான் கிஷான் கிராட் சி பட்டியலிலும் இடம்பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடருக்காக வீரர்கள் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வரும் சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News