இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்!

Updated: Wed, Nov 29 2023 13:09 IST
இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின்  முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த போது, இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி கௌகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 123 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களும் எடுத்தனர். அதன்பின் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டர்வீஸ் ஹெட் 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், ஹார்டி, இங்லீஸ், டிம் டேவிட், மற்றும் ஸ்டோய்னிஸ் ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – மேத்யூ வேட் ஜோடி, இந்திய அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. கடைசி ஒரு ஓவருக்கு 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையையும் அசால்டாக எதிர்கொண்ட இந்த கூட்டணி கடைசி பந்து வரை பயமே இல்லாத பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணிக்கு 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்று கொடுத்தது. மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ரன்களும், மேத்யூ வேட் 16 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர்.

இதுகுறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், “கிட்டத்தட்ட ஈரமான ஒரு பந்தில் பந்து வீசுவது போலான சூழ்நிலையில், இப்படியான ஒரு தோல்வி குறித்து நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன். இது மாதிரியான நிலைமைகளில் ஒரு ஓவருக்கு 12 முதல் 14 ரன்கள் கிடைக்கும். முதல் ஆட்டத்தில் நாங்கள் 210 ரன்களை துரத்தி வெற்றி பெற்றோம்.  பந்துவீச்சாளர்களுக்கு இங்கு நிலமைகள் சற்று கடினமானவை. நாங்கள் இதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேறி போக வேண்டும். மேக்ஸ்வெல் சிறப்பாக பேட்டிங் செய்தார். 

ஏழு ஓவர்களில் நூறு ரன்களும், மூன்று ஓவர்களில் 50 ரன்களும் தேவைப்பட்ட சூழ்நிலையில், அணியை வெற்றி பெற வைத்தது மிகவும் சிறப்பான செயல்பாடு. எங்கள் தரப்பில் இருந்து எங்களது பந்துவீச்சாளர்கள் தங்களிடம் உள்ளதை செயல்படுத்த முயற்சி செய்தார்கள். ஆட்டத்தை கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார்கள். ஆனால் சுற்றிலும் பனிப்பொழிவு நிறைய இருந்தது. இதனால் பந்து நிறைய நழுவியது. பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை