ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த 23ஆம் தேதி கொச்சியில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக கிராக்கி இருந்தது. சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்காக அணிகள் அடித்துக்கொண்டன.

Advertisement

சாம் கரன் ரூ.18.5 கோடி கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார் சாம் கரன். ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை ரூ.17.5 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. பென் ஸ்டோக்ஸை ரூ.16.25கோடிக்கு சிஎஸ்கே அணியும், நிகோலஸ் பூரனை ரூ.16 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹாரி ப்ரூக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.

Advertisement

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்களில் அதிர்ச்சிகரமான ஒரு வீரர் சந்தீப் சர்மா. மிதவேகப்பந்துவீச்சாளரான சந்தீப் ஷர்மா அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இவரும் புவனேஷ்வர் குமாரும் இணைந்து எதிரணிகளின் பேட்டிங் ஆர்டரை சரித்துள்ளனர். புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா இணைந்து விளையாடியபோது சன்ரைசர்ஸ் அணி வலுவான பவுலிங் அணியாக திகழ்ந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் சந்தீப் ஷர்மா ஆடியிருக்கிறார்.

ஐபிஎல்லில் 104 போட்டிகளில் ஆடி 114 விக்கெட்டுகளை வீழ்த்திய சந்தீப் சர்மா, ஐபிஎல்லின் சிறந்த பவுலர்களில் ஒருவர். ஆனாலும் அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு கூட எந்த அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஐபிஎல்லில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது வீரர் சந்தீப் சர்மா. புவனேஷ்வர் குமார் மட்டுமே சந்தீப் ஷர்மாவிற்கு முன்னிருக்கிறார். அந்தளவிற்கு பவர்ப்ளேயில் அருமையாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தவல்ல பந்துவீச்சாளர். 2014லிருந்து 2020 வரை ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 12 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா ஆவார். மேலும் ஐபிஎல்லில் விராட் கோலியை அதிக முறை வீழ்த்திய பவுலரும் சந்தீப் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பேர்ப்பட்ட பவுலரை ரூ.50 லட்சத்துக்குக்கூட எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம் தான். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவர், “நான் மிகவும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தேன். என்னை யாரும் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. எந்த அணிக்கு விளையாடினாலும் நான் சிறப்பாக விளையாடினேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்க முயற்சிப்பார்கள் என்று நினைத்தேன்.

Advertisement

உண்மையை கூறவேண்டுமானால் நான் இதை எதிர்பார்க்கவில்லை. எங்கு தவறு நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் நான் சிறப்பாக விளையாடியுள்ளேன். ரஞ்சி கோப்பை இறுதி சுற்றில் நான் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். சையது முஷ்டக் அலி கோப்பையிலும் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News