பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் தாமாக முன்வந்து களமிறங்கினார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தனது வழக்கமான இடத்தை விட்டு தொடக்க வீரராக களமிறங்கிய டெஸ்ட் போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு மிடில் ஆர்டர் வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால், இத்தொடரில் இருந்து விலகியுள்ளதான் காரணமாக அவரது இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தனது பழைய பேட்டிங் வரிசையான 4ஆம் இடத்தில் களமிறங்குவார் என்று அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி சமீபத்தில் உறுதிசெய்தார். இதன் காரணமாக டிராவிஸ் ஹெட்டை உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், “அவர்கள் என்னிடம் எனது பேட்டிங் ஆர்டர் எங்கே என்று கேட்டார்கள், அதற்கு நான் நான்கு என்றேன். கடந்த வாரம் சில விஷயங்களைப் பார்த்தேன், அதில் நான் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதையும் நான் கூறவில்லை. மாறாக எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினேன்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனாலும் நான்காம் இடத்தில் களமிறங்குவது தான் எனக்கு சிறந்த நிலையாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதற்காக தொடக்க வீரராக களமிறங்கினேன். அதில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும், அந்த இடத்தில் என்னால் நிச்சயம் எதேனும் சாதிக்க என்று உணர்கிறேன். ஆனால் நான் பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், மீண்டும் அதே இடத்தில் விளையாட உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.