எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பேட்டிங் செய்தவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பதும் நிஷங்கா - பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 57 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் 36 ரன்களில் பதும் நிஷங்கா ஆட்டமிழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய லஹிரு உதானா 29 ரன்களையும், நுவனிந்து ஃபெர்னாண்டோ 2 ரன்களுக்கும், இஃப்திகார் அஹ்மத் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது நவாஸ் - சமிகா கருணரத்ணே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அதன்பின் 27 ரன்கள் எடுத்த முகமது நவாஸும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த கருணரத்னே 21 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா அணி தரப்பில் தில்ஷன் மதுசங்கா, துனித் வல்லலகே தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - நிஷன் மதுஷ்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 12 ரன்களுக்கும், திசாரா பெரேரா 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான நிஷன் மதுஷ்கா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் உள்பட 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் பின்னர் களமிறங்கிய மில்லர், ஹிரிடோய் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய துனித் வல்லலகே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.