இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்!

Updated: Sun, Jan 07 2024 20:18 IST
இந்தியாவின் வேகப்பந்து வீச்சும் சவாலை கொடுப்பார்கள் - ஜானி பேர்ஸ்டோவ்! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்தியா 2010/11-பின் முதல் முறையாக சமன் செய்து அசத்தியது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அந்தத் தொடரை சமன் செய்து புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்திற்கும் முன்னேறிய இந்தியா அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

கடந்த 2012-பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி நிறைய வெற்றிகளை குவித்து வரும் இங்கிலாந்து இத்தொடரில் இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும் அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்களைத் தாண்டி சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் இங்கிலாந்து வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஸ்வின் போன்ற ஸ்பின்னர்கள் இத்தொடரில் தங்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பாக இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் அடங்கிய வேகப்பந்து வீச்சு கூட்டணியும் தங்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் வித்தியாசமான பிட்ச்களை பாக்கலாம். அது சுழல வேண்டும் என்ற அவசியமில்லை. சமீப காலங்களில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி எந்தளவுக்கு தரமாக இருக்கிறது என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம்.

இந்தியாவில் உள்ள பிட்ச்கள் சுழலும் என்று நான் நம்புகிறேன். அது முதல் நாளிலிருந்தே சுழன்றால் அவர்களுடைய வேகப்பந்து வீச்சு கூட்டணியின் வலுவை சற்று குறைக்கலாம். அவர்கள் எந்தளவுக்கு வலுவானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். கடந்த முறை நாங்கள் அஸ்வின், அக்சரை எதிர்கொண்டோம். சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமடித்ததால் வெற்றியும் பெற்றோம்.

ஆனால் அதன் பின் சூழ்நிலைகள் தலைகீழாக மாறி விட்டது. எனவே இம்முறையும் இந்தியாவில் தரமான ஸ்பின்னர்கள் எங்களுக்கு எதிராக வருவார்கள் என்பதை அறிவோம். அதில் அக்ஸர் அல்லது குல்தீப் ஆகியோரில் யார் வருவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் வெற்றி பெறுவதற்கு தேவையான 20 விக்கெட்டுகளை எங்களின் ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களும் எடுப்பது அவசியமாகும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை