லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம்!

Updated: Fri, Jul 14 2023 22:18 IST
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமனம் (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது. மறுபுறம் கோப்பையை வெல்ல போராடிய எஞ்சிய அணிகளுக்கு மத்தியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் தங்களுடைய முதல் சீசனை போலவே இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் பாதியிலேயே விலகிய போதும் அந்த அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்து சிறப்பாகவே செயல்பட்டது. இருப்பினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் வெற்றிகரமான மும்பையிடம் தோல்வியை சந்தித்த லக்னோ மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. முன்னதாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஆன்ட்டி ஃபிளவர் செயல்பட்டு வந்தார்.  

இருப்பினும் அவருடைய 2 வருட பதவி காலம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த வருடத்துடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த சீசனில் லக்னோவுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில் அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக இருந்த ஆஸ்திரேலிய அணியை ஒருங்கிணைத்து மீண்டும் உச்சாணி கொம்பிற்கு அழைத்து சென்றவர் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து முன்னேற்றியவர். இதனால் கேரி கிறிஸ்டனுக்கு பின் முக்கியமான பயிற்சியாளர்களில் ஒருவராக மாறினார். இந்த நிலையில் லக்னோ அணி ஆலோசகராக உள்ள கவுதம் கம்பீர், ஜஸ்டின் லங்கர் பெயரை கூறியுள்ளார். 

இவர்கள் இருவருக்கும் பல ஆண்டு காலமாக நட்பு இருந்து வந்தது. குறிப்பாக கவுதம் கம்பீர் வெளிநாடுகளில் விளையாடுகையில், லங்கரிடம் அதிகளவு தொடர்பில் இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இருவருமே ஆக்ரோஷமிக்க குணமுள்ளவர்கள் என்பதால், லக்னோ அணியின் மனநிலையை மாற்ற சரியாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. 

 

இரு நாட்களுக்கு முன் லக்னோ அணியின் நிர்வாகிகள், லண்டனில் உள்ள ஜஸ்டின் லங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நண்பர்கள் இருவரும் இணைந்து அடுத்த சீசனில் லக்னோ அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை