போதை மருந்து பயன்படுத்திய முன்னாள் காதலி; காணொளியை வெளியிட்ட கேசி கரியப்பா!

Updated: Wed, Dec 27 2023 20:08 IST
Image Source: Google

ஐபிஎல் மூலம் பல கிரிக்கெட் வீரர்கள் பணக்காரராக மாறி தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று உழைத்து வருகிறார்கள். ஆனால் சில வீரர்கள் தங்களுக்கு திறமை இருந்தும் கோடிக்கணக்கில் திடீரென்று காசு வருவதால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். 

இப்படி பல கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கர்நாடகாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் கேசி கரியப்பா தற்போது 20 லட்சத்திற்கு கூட செல்லாமல் விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார். இதற்கு காரணம் பணத்தை வைத்துக் கொண்டு பல தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டதால் தான். பெங்களூருவை சேர்ந்த 29 வயதான கரியப்பா கேகேஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 

மொத்தம் 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை கரியப்பா வீழ்த்தி இருக்கிறார். கரியப்பா ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறார். தற்போது அந்தப் பெண்ணும் கரியப்பாவுக்கும் இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது. கரியப்பா மீது பாலியல் புகார், மற்றும் தம்மை கர்ப்பம் ஆக்கிவிட்டதாக புகார் என அந்தப் பெண் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடுத்திருக்கிறார். 

இந்த நிலையில் தன்னுடைய முன்னாள் காதலியை மாட்டிவிடும் வகையில் அவர் போதை மருந்தை பயன்படுத்தும் காணொளி ஒன்றை கரியப்பா எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரியப்பா, தனது முன்னாள் காதலி, போதை பொருட்களை பயன்படுத்தியும் மதுபானங்கள் குடித்தும் தம்மை மிரட்டுவதாக கூறியிருக்கிறார். 

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெங்களூரு மாநகர போலீசார் கரியப்பா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த போதை பொருள் எவ்வாறு வந்தது யார் கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை