மும்பை நகரில் கடந்த ஒரு மாதமாக பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளன. இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் வரும் மே 22-ஆம் தேதி வரை நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவதற்குள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகளை தவிர எஞ்சிய அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன. 

Advertisement

அதேபோல இந்த தொடரில் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நிறைய இளம் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். அதிலும் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் நிறைய இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஜிதேஷ் சர்மா இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என தெரிந்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் 9 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழகத்தின் சாருக்கானுக்கு பஞ்சாப் அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அதில் அவர் சொதப்பியதன் காரணமாக இடையில் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்த ஜிதேஷ் சர்மா இதுவரை நடைபெற்ற போட்டிகளில் முறையே 26 (17), 23 (11), 30* (15), 11 (8), 32 (23), 2 (5), 38* (18) என கடைசி நேரங்களில் களமிறங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய ரன்களை அடிப்பவராக இருந்து வருகிறார். இதுவரை 97 பந்துகளை சந்தித்துள்ள அவர் 14 பவுண்டரிகளையும் 9 சிக்சர்களையும் பறக்கவிட்டுள்ளார்.

இந்த ரன்கள் அனைத்துமே பேட்டிங்க்கு சவாலான கடைசி கட்ட ஓவர்களில் அடித்ததாகும். இப்படி கிடைத்த வாய்ப்புகளை பொன்னாக பயன்படுத்தி வரும் ஜிதேஷ் சர்மா இது ஐபிஎல் தொடரில் விளையாடும் ரிஷப் பண்ட், இஷான் கிசான், சஹா போன்ற இதர இந்திய விக்கெட் கீப்பர்களைக் காட்டிலும் தம்மை மிகவும் கவர்ந்ததாக முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். தற்போது 28 வயது நிரம்பியுள்ள நிலையில் விதர்பாவை சேர்ந்த இவருக்கு இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் நேரடியாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் குறைந்தது பெஞ்சில் “பேக் அப்” வீரராக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய விரேந்திர சேவாக், “சந்தேகமின்றி அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். இஷான் கிசான், ரிஷப் பண்ட், ரிதிமான் சஹா அனைவருமே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள். ஆனாலும் அவர்கள் அனைவரையும் விட ஜிதேஷ் சர்மா தான் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளார். அவரிடம் பயமறியாத பேட்டிங் ஸ்டைல் உள்ளது. அவர் நம்மால் எந்த இடத்தில் அடிக்க முடியும் என கணித்து சரியான ஷாட்களை அடிக்கிறார்.

குறிப்பாக சஹாலை அவர் சிக்ஸர் அடித்தது ஷேன் வார்னேவை ஒருமுறை விவிஎஸ் லக்ஷ்மன் மிட்விக்கெட்டில் சிக்ஸர் அடித்தது எனக்கு நினைவுபடுத்தியது. எனவே அவர் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளார். ஒருவேளை தேர்வு என்பது எனது கையில் இருந்தால் அவரை கண்டிப்பாக பேக்கப் விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவிற்கு நான் அழைத்துச் செல்வேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News