இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி தம்புளாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கலே மார்வெல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய மார்வெல்ஸ் அணிக்கு கேப்டன் நிரோஷன் டிக்வெல்லா - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் நிரோஷன் டிக்வெல்லா 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலெக்ஸ் ஹேல்ஸும் 23 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த டிம் செய்ஃபெர்ட் - பனுகா ராஜபக்ஷா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் டிம் செய்ஃபெர்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் விளையாடிய பனுகா ராஜபக்ஷா 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிஅய் சஹான் அராச்சிகே, ஜனித் லியானகே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் செய்ஃபெர்ட் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தியதுடன், 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 104 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கலே மார்வெல்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா கிங்ஸ் அணி தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியிலும் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 12 ரன்களில் விக்கெட்டைஇ இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் இணைந்த குசால் மெண்டிஸ் - ரைலீ ரூஸோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 30 ரன்கள் எடுத்திருந்த குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ 14 ரன்களிலும், அலெக்ஸ் ரோஸ் 13 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த ரைலீ ரூஸோவும் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சரித் அசலங்கா 14 ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் கலே மார்வெல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டநாயகன் விருதை வென்றார்.