ஐபிஎல் 2025: மார்ஷ், மார்க்ரம் அரைசதம்; மும்பை அணிக்கு 204 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஐடன் மார்க்ரம் ஒருபக்கம் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுமுனையில் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மேற்கொண்டு 27 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் முதல் விக்கெட்டிற்கு 76 ரன்களை எட்டி இருந்த நிலையில், மிட்செல் மார்ஷ் 9 பவுண்டர்கள், 2 சிக்ஸர்கள் என 60 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய நிக்கோலஸ் பூரனும் 12 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் ரிஷப் பந்தும் 2 ரன்களில் நடையைக் கட்டினார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - ஆயூஷ் பதோனி இணை பொறுப்புடன் விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதில் அதிரடியாக விளையாடி வந்த ஆயூஷ் பதோனி 30 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அப்துல் சமத் 4 ரன்களிலும், அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்துள்ளது. மும்பை தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.