மகாராஜா கோப்பை 2024: ஹுப்லி டைகர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மைசூர் வாரியர்ஸ்!
கர்நாடகாவில் நடைபெற்றுவரும் மகாராஜா கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹுப்லி டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹுப்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. பின்னர் களமிறங்கிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ் யு கார்த்திக் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கார்த்திக் 6 ரன்களுக்கும், கேப்டன் கருண் நாயர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கார்த்திக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் 26 ரன்களுக்கும், சுமித் குமார் 18 ரன்களுக்கும், மனோஜ் 26 ரன்களுக்கும், ஹர்ஷில் தார்மனி 14 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. ஹுப்லி அணி தரப்பில் எல்ஆர் குமார் 3 விக்கெட்டுகளையும், வித்வாத் கவெரெப்பா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹுப்லி டைகர்ஸ் அணியிலும் தொடக்க வீரர் முகமது தஹா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த திப்பா ரெட்டி - கிருஷ்ணன் ஸ்ரீஜித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் திப்பா ரெட்டி 33 ரன்களிலும், கிருஷ்ணன் 20 ரன்களிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த அனீஷ்வர் கௌதம், கேப்டன் மனீஷ் பாண்டே ஆகியோர் தலா 6 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஹுப்லி அணி 95 ரன்களுக்குகே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் ஜோடி சேர்ந்த கார்த்திகேயா - மன்வந்த் குமார் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெலிப்படுத்திய கார்த்திகேயா அரைசதம் கடந்து அசத்தியதுடன், இறுதிவரை போராடி 61 ரன்களையும், மன்வந்த் குமார் 21 ரன்களையும் சேர்த்தாலும், ஹுப்லி அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஹுப்லி டைகர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.