மகாராஜா கோப்பை 2024: சதமடித்து மிரட்டிய கருண் நாயர்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Aug 20 2024 10:26 IST
Image Source: Google

கர்நாடகா கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் மஹாராஜா கோப்பை டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் மைசூர் வாரியர்ஸ் - மங்களூரு டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மங்களூரு டிராகன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய மைசூர் அணியில் கார்திக் சிஏ 11, கார்த்திக் எஸ்யு 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். ஒருபக்கம் கருண் நாயர் அதிரடியில் மிரட்ட, மறுபக்கம் களமிறங்கிய சமித் டிராவிட் 16 ரன்களுக்கும், சுமித் குமார் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஆனால் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கருண் நாயர் சதமடித்து அசத்தியதுடன் 13 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். 

அவருக்கு துணையாக விளையாடிய மனோஜும் 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் மைசூர் வாரியர்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களைச் சேர்த்தார். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மங்களூரு டிராகன்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து தடுமாறியது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். 

பின்னர் இணைந்த நிகின் ஜோஸ் - கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கிருஷ்ணமூர்த்தி அரைசதம் கடந்த கையோடு 50 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 32 ரன்களில் நிகின் ஜோஸும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

 

இதனால் அந்த அணி 14 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரண்மாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது விஜேடி முறையில் மைசூர் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மங்களூரு டிராகன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய கருண் நாயர் ஆட்டநயகன் விருதை வென்றார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இப்போட்டிக்கு முன்னதாக கருண் நயர் அளித்த ஒரு பேட்டியில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவர் பேட்டியளித்த அடுத்த போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளது அவர் தனது கம்பேக்கிற்காக எவ்வளவு கடுமையாக உழைத்து வருகிறார் என்பது தெரிகிறது. மேலும் கருண் நாயர் சதமடித்து அசத்திய காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை