சையித் முஷ்டாக் அலி கோப்பை: பிரித்வி ஷா சதத்தில் மும்பை அபார வெற்றி!

Updated: Fri, Oct 14 2022 16:18 IST
Maiden Hundred For Prithvi Shaw In T20 Against Assam In Syed Mushtaq Ali Trophy 2022 (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் பெரிய நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா, காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரத்வி ஷாவுக்கும் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது திறமையை பல முறை நிரூபித்தும் டி20 உலககோப்பை அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை.

தனது உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக 7 கிலோ வரை உடை எடையை பிரித்வி ஷா குறைத்தார். இந்த நிலையில் சையத் முஷ்டாக்  அலி தொடரில் பிரித்வி ஷா தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். முதல் போட்டியில் 34 பந்தில் 55 ரன்கள், 2வது டி20 போட்டியில் 12 பந்தில் 29 ரன்கள் என்ற விளாசிய பிரித்வி ஷா, தற்போது டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

அதன்படி ராஜ்காட்டில் நடைபெற்ற போட்டியில் மும்பை - அசாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ட்டாஸ் வென்ற அசாம் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து பிரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய அவர் 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

அத்துடன் பிரித்வி ஷா நிற்கவில்லை. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி தள்ளினார். இதன் காரணமாக மும்பை அணி 8.2 வது ஒவரில் 100 ரன்களையும், 12.3வது ஓவரில் 150 ரன்களையும் எட்டியது. தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 46 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். 

அத்துடன் நிற்காமல் அடுத்த 15 பந்தில் பிரித்வி ஷா மேலும் 31 ரன்கள் சேர்த்தார். இதன் காரணமாக 61 பந்தில் 134 ரன்கள் என்று விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய அசாம் அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக ராஜ் அஹ்மத் 39 ரன்களையும், ரியான் பராக் 28 ரன்களையும், ராகுல் ஹஸரிகா 26 ரன்களையும் சேர்த்தனர்.

இறுதியில் அதிரடியாக விளையாடிய முஹ்தார் ஹுசைன் 11 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை விளாசி 25 ரன்களைச்சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களோடும் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். 

இதனால் 19.3 ஓவர்களில் அசாம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களை மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அசாம் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை