எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை - மார்க் டெய்லர் வருத்தம்!

Updated: Fri, Oct 13 2023 14:59 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் 5 முறை ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வென்ற அணியான ஆஸ்திரேலிய அணியின் தற்போதை செயல்பாடு பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தொடக்கத்தில் அனுபவம் வாய்ந்த இடது கை பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். மூன்றாவது இடத்தில் தற்காலத்தின் தலைசிறந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் ஸ்மித். நான்காவது இடத்தில் அவரின் ஜெராக்ஸ் லபுஷாக்னே. இதற்கு கீழே அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாட இறுதியில் அதிரடி பேட்ஸ்மேன்கள்.

மேலும் நான்கு பேட்டிங் ஆல்ரவுண்டர்கள். உலகின் தலைசிறந்த வேகம் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள், உலகின் மிகச் சிறந்த பீல்டிங் அணி என்று இப்படி எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒரு அணியாகவே ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆனால் நடப்பு உலக கோப்பையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலிய வெளிப்படுத்திய ஆட்டம் அவர்களின் இயல்பான ஆட்டமாகவே இல்லை. அவர்களிடம் இருக்கும் ஒரு போர்க்குணம் வெளிப்படவில்லை. அவர்கள் தற்காப்பாகவே எல்லா நேரத்திலும் இருந்தார்கள்.

இந்த இரண்டு போட்டியிலும் அவர்கள் 200 ரண்களை தொடவில்லை. மேலும் அவர்கள் முக்கியமான நேரத்தில் சரியான விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை. களத்தில் அவர்களது நம்பிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், “நேற்று இரவு அவர்கள் வென்றே இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் இரண்டு போட்டிகளிலும் 199 மற்றும் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள்.

இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் அவர்கள் இதுவரை 200 ரன்களை தாண்டவில்லை. ஆஸ்திரேலியாவுக்காக யாரும் 40 ரன்கள் மேல் எடுக்கவில்லை. நாங்கள் முதலில் பந்து வீச வேண்டுமா? அல்லது பேட்டிங் செய்ய வேண்டுமா? என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. மேலும் எங்களுடைய அணி எதுவென்றே எங்களுக்கு தெரியவில்லை. எனவே நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதுதான் மிகவும் கவலையான விஷயமாக இருக்கிறது. 

இந்த இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா நெருக்கமாக இல்லை. அவர்களுக்கு தற்போது தங்களின் சிறந்த அணி எதுவென்று கண்டறிய நான்கு நாட்கள் கைவசம் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும். அணிக்கு யாராவது ஒருவர் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். அடுத்த மூன்று நான்கு நாட்களில் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை