ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது - மேத்யூ ஹைடன்!

Updated: Fri, Jun 02 2023 12:34 IST
Matthew Hayden reveals what could have given Australia major edge over India! (Image Source: Google)

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக மோதுகின்றன. பொதுவாக இந்திய அணியினர் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகியதால் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானங்களில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது வழக்கமாகும்.

அதனாலேயே அங்கு 2007க்குப்பின் 15 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட வெல்லாமல் இந்தியா தவித்து வருகிறது. மறுபுறம் வேகத்துக்கு சாதகமான மைதானங்களில் விளையாடப் பழகிய ஆஸ்திரேலியர்களுக்கு சுழலுக்கு சாதகமான இந்தியாவில் விளையாடுவதை விட இங்கிலாந்தில் விளையாடுவது சாதகமான ஒன்றாகும். ஏனெனில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களைப் போன்ற தன்மையும் கால சூழ்நிலையும் தான் இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் காணப்படும்.

அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானம் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன் ஆகிய ஐசிசி தரவரிசையில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களையும் மிட்சேல் ஸ்டார்க், பட் கமின்ஸ், ஹேசல்வுட் போன்ற தரமான பவுலர்களையும் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு பொருந்தக்கூடிய ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை விட ஓவல் மட்டும் தான் இந்தியாவுக்கு மிகவும் பிடித்த சுழலுக்கு சாதகமாக இருக்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது.

அதை விட புள்ளி விவரங்களின்படி இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களிலேயே ஓவல் ஆஸ்திரேலியாவுக்கு ராசியற்றதாக இருந்து வருகிறது.  குறிப்பாக லார்ட்ஸ், மான்செஸ்டர், ஹெண்டிங்க்லே போன்ற மைதானத்தில் 40 முதல் 50% வெற்றிகளை பதிவு செய்துள்ள ஆஸ்திரேலியா ஓவல் மைதானத்தில் மட்டும் 145 வருடங்களில் வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதாவது 1880இல் வரலாற்றிலேயே முதல் முறையாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா இதுவரை வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடந்த 1972க்குப்பின் 50 வருடங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது ஸ்பின்னர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது. எனவே பொதுவான அந்த மைதானத்தில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடப் போகிறது என்பதை பார்க்க அவருடன் காத்திருக்கிறேன். ஒருவேளை இந்த போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்திருந்தால் கூட அது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்திருக்கும்.

அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. அதாவது கிரிக்கெட் என்பது இந்தியாவில் வாழ்க்கையாக இருக்கிறது. விளையாட்டின் டிஎன்ஏவாக பார்க்கப்படும் அதற்கு வேறு போட்டியும் கிடையாது. இதுவே ஆஸ்திரேலியாவில் நீங்கள் நடந்து சென்றால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனெனில் கிரிக்கெட்டுக்கு நிகராக அங்கு ரஃபி, கால்பந்து போன்ற நிறைய விளையாட்டுகள் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் அழுத்தமும் அதிகமாகும். எனவே இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை