இறுதி, அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Updated: Wed, Nov 15 2023 12:40 IST
இறுதி மற்றும் அரையிறுதி போட்டிக்கான பிட்சை மாற்றிய பிசிசிஐ; வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி! (Image Source: Google)

உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது, இந்தப் போட்டி நடக்க உள்ள பிட்ச்சை இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிற உதவி பயிற்சியாளர்கள் இரு நாட்கள் முன்பு பார்வையிட்டனர். அப்போது அவர்கள் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட பிட்ச்சை பார்வையிட்டு, அதில் புற்களை நீக்குமாறு ஊழியர்களிடம் கோரிக்கை வைத்ததாக செய்தி வெளியானது.

ஆனால், இங்கிலாந்தின் செய்தி நிறுவனம் ஒன்றில் பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடக்க உள்ள அஹ்மதாபாத் மைதானத்தில் ஐசிசி மேற்பார்வையாளர் அட்கின்சன் கூறியதற்கு மாறாக வேறு ஒரு பிட்ச்சை இறுதிப் போட்டிக்கு தயார் செய்து இருப்பதாகவும், அதே போல இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள பிட்ச் போட்டிக்கு முந்தைய தினம் இரவோடு இரவாக மாற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை முக்கிய நியூசிலாந்து ஊடகம் ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாற்றி உள்ளது. அந்த ஊடகத்தில் இறுதிப் போட்டி பிட்ச்சை பிசிசிஐ மாற்றியதையும், அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச் மாற்றப்பட்டது குறித்தும் விரிவாக கூறப்பட்டு உள்ளது. முதலில் இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு மும்பை வான்கடேவில் இதுவரை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறாத ஏழாம் நம்பர் பிட்ச்சை பயன்படுத்த வேண்டும் என ஐசிசி மேற்பார்வையாளர் அட்கின்சன் கூறி இருக்கிறார். 

முதலில் அதை தயார் செய்த பிசிசிஐ அதிகாரிகள், தற்போது அதில் சிக்கல் இருப்பதாகக் கூறி அதிரடியாக ஆறாம் எண் பிட்ச்சை தயார் செய்து இருக்கின்றனர். இதுகுறித்து வாட்சபில் 50க்கும் மேற்பட்ட பிசிசிஐ அதிகாரிகள், ஐசிசி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அந்த ஆறாம் எண் பிட்ச்சில் தான் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா போட்டி மற்றும் இந்தியா - இலங்கை போட்டி நடைபெற்றது. இலங்கை அணியை இந்தியா 55 ரன்களுக்கு சுருட்டிய பிட்ச் அது. இந்திய அணிக்கு சாதகமானது என்பதால் அந்த பிட்ச்சை பிசிசிஐ மாற்றி இருக்கலாம் என நியூசிலாந்து ஊடகம் சந்தேகம் கிளப்பி இருக்கிறது.

அதே போல, இறுதிப் போட்டி நடைபெற பிட்ச்சும் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் பொறுமை இழந்த அட்கின்சன், ஐசிசிக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாகவும், அதில் உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்கான பிட்ச் தொடரை நடத்தும் நாட்டின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டதாக பலரும் சந்தேகம் கிளப்பும் வகையில் பிட்ச் மாற்றம் நடந்து வருவதாக அவர் கூறி இருக்கிறார் என நியூசிலாந்து ஊடகம் கூறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை