வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா!

Updated: Thu, Nov 16 2023 13:52 IST
வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி - ரோஹித் சர்மா! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நான் இந்த மைதானத்தில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். ஆனாலும் இந்த போட்டியில் ரிலாக்ஸாக என்னால் இருக்க முடியாது. ஏனெனில் எவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க நினைத்தேன். ஏனெனில் இந்த போட்டியில் நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அதனால் எந்த இடத்திலுமே எங்களால் ஓய்வாக இருக்க முடியாது. அவர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை நாங்கள் சொதப்பலான ஃபீல்டிங்கால் தவறவிட்டோம். ஆனால் இது போன்ற போட்டிகளில் அது நடக்கக்கூடிய ஒன்றுதான். இருந்தாலும் இறுதியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவர்கள் எங்களுக்கு இந்த போட்டியில் நிறைய வாய்ப்புகளை வழங்கினார்கள். ஆனாலும் நாங்கள் அதனை தவற விட்டோம்.

இருப்பினும் இறுதியில் ஷமி மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணி சார்பாக மிட்சல் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். ஷமி இந்த போட்டியில் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதேபோன்று எங்களது அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷுப்மன் கில் தொடக்க வீரராக அற்புதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். அதோடு கோலி வழக்கம் போல் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நிச்சயம் இந்த வெற்றியை அப்படியே நாங்கள் தொடர்வோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக 230 ரன்களை அடித்த போதும் எங்களது பந்துவீச்சார்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அந்த வகையில் இந்த போட்டியின் போதும் அழுத்தத்தில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கொண்டு வந்ததில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை