உலகப்புகழ் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கி 2ஆவது வாரத்தைக் கடந்துள்ளது. 

Advertisement

இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. வரும் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

Advertisement

அதிலும் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் முழு மூச்சுடன் மோதி வருகின்றன. அப்போது தான் அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பையை பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

பொதுவாகவே ஐபிஎல் என்றால் அதிரடியான பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பரபரப்பான த்ரில் தருணங்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பதாலேயே ரசிகர்களிடம் இந்த அளவுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் இதுவரை நடைபெற்ற 23 போட்டிகளில் நிறைய பரபரப்பான த்ரில் தருணங்கள் காணப்பட்டன. குறிப்பாக கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்களை அடித்து வெற்றி பெற்ற போட்டியையும் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசப்பட்ட போட்டியையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

இப்படி என்னதான் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்து இருந்தாலும் இந்த வருட ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும், சென்னையும் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகின்றன. மறுபுறம் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற ரசிகர்களிடையே வெகுவாக பிரபலம் அடையாத அணிகள் அடுத்தடுத்த வெற்றியுடன் புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் உள்ளன.

அதிலும் நேற்று முளைத்த காளான்களாக கருதப்படும் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கூட அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து வெற்றி நடை போட்டு வருகின்றன. ஆனால் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட மும்பையும், சென்னையும் தோல்வி அடைந்து வரும் நிலையில் நிறைய ரசிகர் பட்டாளங்கள் இல்லாத லக்னோ, குஜராத் போன்ற அணிகள் வெற்றி நடை போடுவது ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதாவது இந்த வெற்றிகரமான அணிகளின் தோல்வி எதிரொலியால் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் நடந்த முதல் 8 போட்டிகளுக்கான தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங் கடந்த வருடத்தைவிட 33% குறைந்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வரும் வாரங்களில் அந்த ரேட்டிங் உயரும் என நம்பிய பிசிசிஐக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏனெனில் இந்த வருடம் 2-வது வாரத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் டிஆர்பி ரேட்டிங் என்பது கடந்த வருடம் 2ஆவது வாரத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளுக்கான தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கை விட 28% சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த வருடங்களில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டிய காரணத்தால் இந்த வருடம் புதிதாக 2 அணிகளை சேர்த்த பிசிசிஐக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப செய்துவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமம் இந்த வருடத்துடன் முடிகிறது. எனவே அடுத்த 4 – 5 வருடங்களுக்கான ஒளிபரப்பு உரிமையை விரைவில் ஏலத்தில் விட இருக்கும் பிசிசிஐ அதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையாக 30,000+ கோடிகளை நிர்ணயித்துள்ளது.

அந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார், டிவி 18, அமேசான், ஜீ மற்றும் சோனி போன்ற உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அப்படிப்பட்ட இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான டிவி ரேட்டிங் 2ஆவது வாரத்திலும் தொடர்ந்து சரிந்து வருகிறது என்ற செய்தி ஒளிபரப்பு உரிமையை வாங்க இருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வரும் வாரங்களில் இந்த டிவி ரேட்டிங் ஏற்றத்தைக் காணும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News