யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!

Updated: Tue, Feb 20 2024 15:05 IST
யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்! (Image Source: Google)

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். மேலும் ஐபிஎல் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலமாக இவர் இந்திய அணியில் தனது இடத்தைப் பிடித்தார். அதன்படி, ஆரம்ப காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால், அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த 2021ஆம் ஆண்டு வரை விளையாடி வந்தார்.

இதில் ஆர்சிபி அணிக்காக 114 போட்டிகளில் விளையாடிய சஹால், 139 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இந்நாள் வரை வைத்துள்ளார். ஆனால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணியானது யுஸ்வேந்திர சஹாலை தக்கவைக்காமல் அணியிலிருந்து விடுவித்தது. 

இருப்பினும் ஏலத்தில் சஹாலை நிச்சயம் ஆர்சிபி அணி வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுஸ்வேந்திர சஹாலை ரூ.6.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. அச்சமயத்தில் இதுகுறித்து பேசிய சஹால், “எட்டு வருடங்களாக ஆர்சிபி அணியின் ஒரு பகுதியாக இருந்த நான், தற்போது ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. ஐபிஎல் ஏலத்திற்குப் பிறகு இந்த முடிவைப் பற்றி எனக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இது என்னை மிகவும் வருத்தப்படுத்தியது.

மேலும் நான் தேர்வு செய்யப்படாதது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. நான் அவர்களுக்காக 114 ஆட்டங்களில் விளையாடினேன் என்று நினைக்கிறேன். திடீரென்று என்ன நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் யுஸ்வேந்திர சஹாலை ஏன் ஆர்சிபி அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை ஆர்சிபி அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக நாங்கள் மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைத்தோம். ஏனெனில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரை நாங்கள் ஏலத்தில் எடுத்துவிடலாம் என்று எண்ணினோம். அப்படி செய்ததால் எங்களிடன் கூடுதலாக நான்கு கோடி ரூபாய் பணம் இருந்தது.  ஆனால், வீரர்களின் ஏலத்தின் போது ஆறாவது சுற்றில் தான் சஹாலின் பெயர் இடம் பெற்றது.

அதனால், அவர் பெயர் வரும் வரை காத்திருந்தால் எங்களால் அதற்கு முன் அறிவிக்கப்பட்ட பல வீரர்களை வாங்க முடியாமல் போயிருக்கும். எனவே, ஏலத்தின் சூழ்நிலை கருதி அன்று சாஹலை நாங்கள் வாங்கவில்லை. மேலும், ஆறாவது சுற்று வரும் வரை நாங்கள் காத்திருந்தாலும், அப்போது எங்களைவிட சில அணிகளிடம் அதிக பணம் இருந்தது. அவர்களுடன் போட்டி போட்டு சாஹலை வாங்கும் அளவுக்கு எங்களிடம் அப்போது பணம் இல்லை.

இதுகுறித்து ஏலம் முடிந்த உடன் நான் சாஹலிடம் இது குறித்து தொலைபேசியில் விளக்கம் அளிக்க முயன்றேன். ஆனால், அவ அவர் ஏலம் குறித்த செயல்பாட்டை புரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. தன்னை ஏலத்தில் வாங்கவில்லை என்பதில் மட்டுமே அவர் எண்ணம் இருந்தது. நான் அவரைக் குறை கூறவில்லை. அவர் ஒரு ஆர்சிபியன் மற்றும் அவர் விரக்தியடைந்தார். ஆனால் நாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை அவர் நன்கு அறிந்திருப்பார் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை