ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதை தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் முடிந்தளவுக்கு போராடிய அந்த அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

Advertisement

மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 1995-க்குப்பின் 28ஆவது வருடமாக தொடர்ந்து 16ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 317 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு 146/4 என்ற சூழ்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் முகமது ரிஸ்வான் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

Advertisement

இருப்பினும் 35 ரன்களில் இருந்த போது பட் கமின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட அவர் தவறாக கணித்தார். அப்போது அவருடைய கையில் பந்து உரசிக் கொண்டு செல்வது போல் தெரிந்ததால் ஆஸ்திரேலிய அணியினர் அவுட் கேட்டும் களத்தில் இருந்த அம்பயர் கொடுக்கவில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஆஸ்திரேலிய அணியினர் டிஆர்எஸ் எடுத்தனர்.

அதை 3ஆவது நடுவர் சோதித்த போது கையில் வியர்வை வடிந்து கையுறைக்குள் செல்வதை தடுப்பதற்காக மணிக்கட்டு பகுதியில் முகமது ரிஸ்வான் அணிந்திருந்த துணியின் மேல் பந்து உரசியது தெரிய வந்தது. அதனால் 3ஆவது நடுவர் தீர்ப்பை மாற்றி அவுட் என்று வழங்கியதால் முகமது ரிஸ்வான் கோபமடைந்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். 

மேலும் அந்த தருணம் பாகிஸ்தான் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்நிலையில் முகமது ரிஸ்வானுக்கு நடுவர் வழங்கிய தீர்ப்பு தான் பாகிஸ்தானின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக இயக்குனர் மற்றும் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “அணியாக நாங்களும் சில தவறுகள் செய்தோம். அதை நாங்கள் சரி செய்வோம். ஆனால் அதே சமயம் சுமாரான அம்பயரிங், டெக்னாலஜி இல்லாமல் போனால் இப்போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். எனவே இது போன்ற விஷயங்கள் முன்னேற வேண்டும் என்று கருதுகிறேன். டெக்னாலஜிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் சந்தேகத்துடன் அதை பயன்படுத்தி போட்டியின் முடிவை மாற்றும் அளவுக்கு நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News