‘சர்ச்சை கருத்து’ - ஹசன் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த முகமது ஷமி!

Updated: Wed, Nov 08 2023 19:03 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதனால் அரையிறுதிக்கு முதலில் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு எதிரணிகளை மிரட்டி வருகிறது. இந்த வெற்றிகளில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பேட்டிங் துறையில் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு நிகராக பந்து வீச்சு துறையில் முகமது ஷமி எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். அதை தொடர்ந்து நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை இந்தியா கட்டுப்படுத்தும் போது 4 விக்கெட்களை எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் இலங்கையை வெறும் 55 ரன்கள் சுருட்டி மாஸ் வெற்றி பெறுவதற்கும் 5 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார்.

இதனால் ஜாகிர் கான், ஸ்ரீநாத் போன்ற ஜாம்பவான்களை முந்திய அவர் உலகக் கப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியராக மாபெரும் சாதனை படைத்தார். அப்படி தரமான வேகம் ஸ்விங் போன்றவற்றால் மிரட்டும் ஷமியை ஜாம்பவான்கள் ஹைடன், வாஷிம் அக்ரம், சோயப் அக்தர் போன்றவர்கள் வெளிப்படையாக பாராட்டினார்கள்.

ஆனால் அவர்களுக்கு மத்தியில் இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே ஐசிசி புதிய பந்துகளை கொடுப்பதாலேயே இந்திய பவுலர்களால் இந்தளவுக்கு ஸ்விங் செய்ய முடிவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசான் ராஜா வேடிக்கையான விமர்சனத்தை வைத்தார். அத்துடன் ஒளிபரப்பு நிறுவனத்தின் உதவிகளை பயன்படுத்தி இந்தியா டிஆர்எஸ் விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதாகவும் அவர் விமர்சித்தார்.

 

இந்நிலையில் அவருக்கு முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியான பதிலடியை கொடுத்துள்ளார். அதில், “இதை சொன்னதற்காக அவமானமாக உணர்ந்து உங்களுடைய விளையாட்டில் கவனத்தை செலுத்துங்கள். மற்றவர்களின் வெற்றிக்காக மகிழ்ச்சியடையுங்கள். இது ஐசிசி நடத்தும் தொடரே தவிர ஏதோ ஒரு உள்ளூர் தொடரில்லை. சொல்லப்போனால் உங்களுடைய முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் பாய் இது பற்றி உங்களுக்கு விளக்கினார். எனவே குறைந்தபட்சம் உங்களுடைய முன்னாள் வீரர் வாசிம் அக்ரமையாவது நம்புங்கள். ஹாஹாஹா. நீங்கள் உங்களையே வாவ் என்று பாராட்டுவதில் பிஸியாக இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார். 

முன்னதாக பாகிஸ்தான் உள்ளிட்ட மற்ற அணிகளின் பவுலர்களை காட்டிலும் இந்திய பவுலர்கள் ஏதேனும் புதிய திறமையை கற்றிருப்பதால் இவ்வளவு ஸ்விங்கை பெறுகிறார்கள் என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஹசன் ராஜாவுக்கு ஜாம்பவான் வாசிம் அக்கரம் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை