முகமது ஷமி ஊசி செலுத்துக்கொண்டு உலகக்கோப்பையில் விளையாடினார்; சக வீரர் அளித்த தகவல்!

Updated: Sat, Dec 30 2023 17:25 IST
முகமது ஷமி ஊசி செலுத்துக்கொண்டு உலகக்கோப்பையில் விளையாடினார்; சக வீரர் அளித்த தகவல்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்தது. இதில், 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெற்றிருந்தாலும் முதல் 4 போட்டிகளில் பிளேயிங் 11ல் அவர் இடம் பெறவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்த நிலையில், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் மூலமாக பிளேயிங் 11இல் இடம் பெற்று விளையாடினார்.

இந்தப் போட்டியில், அவர் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கைப்பற்றி அசத்தினார். மேலும், இந்தப் போட்டியில் அவர் 10 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார். அதன் பிறகு இந்த தொடர் முழுவதும் 7 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். 9 லீக் போட்டிகள் மற்றும் ஒரு அரையிறுதி போட்டி என்று எல்லாவற்றிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசியாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியது.

இந்த தொடருக்கு பிறகு இடது குதிகால் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த முகமது ஷமி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், உடல்தகுதி காரணமாக விலகினார். இந்த நிலையில் தான் ஷமியின் முன்னாள் சகவீரர் ஒருவர் ஷமி குறித்து கூறியுள்ளார்.

ஷமி குறித்து பேசிய அவர், “ஷமிக்கு நீண்டநாள் குதிகால் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர் ஊசி போட்டுக் கொண்டார் என்பதும், வலியுடன் விளையாடியதும் பலருக்கும் தெரியாது. ஆனால், நீங்கள் வயதாகும் போது ஒவ்வொரு காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

முகமது ஷமி இல்லாத நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா அணியில் இடம் பெற்று விளையாடியுளார். இந்தப் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை