இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம ஸ்கோரை எடுத்ததன் காரணமாக அப்போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் தொடரை சமனிலையில் வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழுபுவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்கா அதனை தடுத்து விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு ஸ்விங் ஆனதால் அது அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது.
இதனால் இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல் பந்திலேயே நிஷங்காவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சாதனை பட்டியளில் இணைந்துள்ளார். அதன்படி ஒருநாள் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய நான்காவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை சிராஜ் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக முன்னாள் வீரர்கள் தேபாஷிஷ் மொகந்தி, ஜாகீர் கான், பிரவீன் குமார் ஆகியோர் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்ழ்த்தி சாதனையை படைத்துள்ளது குறிப்பிடதக்கது. இதில் ஜாகீர் கான் 2009ஆம் ஆண்டும், பிரவீன் குமார் 2010ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அவர்கள் வரிசையில் தற்சமயம் முகமது சிராஜும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.