இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் - சஞ்சு சாம்சன்!

Updated: Wed, Oct 16 2024 22:13 IST
Image Source: Google

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர்களில்  ஒருவராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். இந்திய அணிக்காக கடந்த 2015ஆம் ஆண்டே அறிமுகமானாலும், தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காத தால் ஒவ்வொரு முறையும் தனது வாய்பிற்காக காத்திருந்தார். இந்நிலையில் சமீப காலமாக ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அணியிலும் இடம்பிடிக்க ஆரம்பித்தார். 

மேற்கொண்டு கடந்தாண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து அசத்திய சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். ஆனால் அத்தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்நிலையில் தான் ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தனது முதல் டி20 சதத்தை அடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் ரசிகர்களின் விருப்பமாக மாறியுள்ளார். இதனால் இனிவ்ரும் தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளது கவனம் ஈர்க்கிறது.

அதன்படி, கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை இரண்டாவது சுற்று ஆட்டத்தில் விளையாடுவதற்காக சஞ்சு சாம்சன் கேரள அணியில் இணைந்துள்ளார். அப்போது பேசிய அவர், "சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் வெற்றிபெறும் திறமை என்னிடம் இருப்பதாக நான் நம்புகிறேன், மேலும் என்னை வெறும் வெள்ளை-பந்து கிரிக்கெட்டுடன் மட்டுப்படுத்த விரும்பவில்லை. இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

துலீப் கோப்பை தொடருக்கு முன், ரெட்-பால் கிரிக்கெட்டுக்கு என்னை பரிசீலிப்பதாக தலைமைக் குழு என்னிடம் கூறியது. மேலும் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு மேலும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடும்படியும் கேட்டுக் கொண்டது. அதற்கேற்றவகையில், துலீப் கோப்பை தொடரில் நான் சதமடித்தது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டின் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நான் அதனை செய்தது எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

சமீபத்தில் நடந்து முடிந்த துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா டி அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், இந்திய ஏ அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அதிரடியான சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதிலும் அவர் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து தான் அவர் வங்கதேச தொடரிலும் சதமடித்து மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை