WPL 2025: எல்லிஸ் பெர்ரி சாதனையை முறியடித்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா- ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இதில் யஷ்திகா பாட்டியா 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஹீலி மேத்யூஸுடன் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் அதிரடியாக விளையாடினார். இப்போட்டியில்அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதன்பின் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹீலி மேத்யூஸும், 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களை எடுத்த கையோடு நாட் ஸ்கைவர் பிரன்ட்டும் விக்கெட்டை இழக்க, ஆடுத்து களமிறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் டேனியல் கிப்சன் 34 ரன்களையும், போப் லிட்ச்ஃபீல்ட் 31 ரன்களையும், பார்தி ஃபுல்மாலி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளையும், அமெலிய கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் அந்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் புதிய வரலாறு படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி, இப்போட்டியில் நாட் ஸ்கைவர் பிரண்டு 77 ரன்களைச் சேர்த்ததன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக எல்லிஸ் பெர்ரி 25 போட்டிகளீல் 64.80 என்ற சராசரியில் 972 ரன்களைக் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது நாட் ஸ்கைவர் பிரண்ட் 28 போட்டிகளில் விளையாடி 997 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.