இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது - ரோஹித் பௌடல்!

Updated: Tue, Sep 05 2023 12:57 IST
Image Source: Google

இந்தியா - நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி நேற்று கண்டி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்த்து களமிறங்கிய நேபாள் அணி ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பாராட்டினை பெற்றது.

அந்த வகையில் நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடிய நேபாள் அணியானது துவக்கத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 10 ஓவர்களில் 65 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

ஆனால் அதன்பிறகு இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை அந்த அணி இழந்தாலும் இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக ஓரளவு சிறப்பான போராட்டத்தை அளித்து இறுதியில் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக துவக்க வீரர் ஆஷிக் ஷேக் 58 ரன்களையும், சோம்பல் காமி 48 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது பேட்டிங் செய்யும்போது மழை குறுக்கிட்டதால் 23 ஓவர்களில் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து, விளையாடி இந்திய அணி 20.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 145 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நேபாள் அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக அவர்களின் இந்த செயல்பாடு சிறப்பாகவே இருந்தது என கூறலாம்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நேபாள் அணியின் கேப்டன் ரோகித் பௌடல், “இந்த போட்டியில் எங்களது தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் மிடில் ஆர்டரில் இன்னும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டியது அவசியம். நாங்கள் 30 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக நினைக்கிறோம். 260 முதல் 270 ரன்கள் வரை அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் மிடில் ஆர்டரில் எங்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதேபோன்று எங்கள் அணியின் பின்வரிசை வீரர்கள் கடந்த நான்கு ஐந்து மாதங்களாகவே மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இது போன்ற கடினமான மைதானங்களில் விளையாடுவது மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் மழைக்கு பிறகு பந்தை சரியாக பிடிக்கமுடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை