இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 30) மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ராபின்சன்னுடன் இணைந்த மார்க் சாப்மேன் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடம், இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டிம் ராபின்சன் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த மார்க் சாப்மேனும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Also Read: Funding To Save Test Cricket
அவர்களைத் தொடர்ந்து வந்த கிளென் பிலீப்ஸ் தனது பங்கிற்கு 23 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செலும் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் ஹெய் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா, நுவான் துஷாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.