NZW vs SLW, 3rd ODI: ஜார்ஜியா பிளிம்மர் சதம்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!

Updated: Sun, Mar 09 2025 15:14 IST
Image Source: Google

இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. நடைபெற்று வந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையி, இந்நிலையில் நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நெல்சனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதன்பின் அரைசதம் கடந்து விளையாடி வந்த சூஸி பேட்ஸ் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய எம்ம மெக்லட் 4 ரன்களுக்கும், ப்ரூக் ஹாலிடே 36 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜார்ஜியா பிளிம்மர் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 112 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் மேடி க்ரீன் 32 ரன்களையும், இஸபெல்லா காஸ் 24 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சுகந்திகா குமாரி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து - விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விஷ்மி குணரத்னே 6 ரன்னிலும், சமாரி அத்தபத்து 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இமேஷா துலானியும் 11 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் இணைந்த கவிஷா தில்ஹாரி - நிலாக்‌ஷி டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கவிஷா தில்ஹாரி மற்றும் நிலாக்‌ஷி டி சில்வா ஆகியோர் தலா 45 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டனர். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அனுஷ்கா சஞ்சீவனி 23 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஸ் கெர், ஃபிரான் ஜோனஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை