இந்த தோல்வி பெரும் ஏமாற்றத்தை கொடுக்கிறது - ஷான் மசூத்!

Updated: Tue, Sep 03 2024 20:26 IST
Image Source: Google

பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது 262 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை மட்டுமே எடுத்தது.

பின்னர் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வங்கதேச அணியானது மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 

மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லிட்டன் தாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் தோல்வியானது பெரும் ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “மிகுந்த ஏமாற்றத்திற்கு பிறகு நாங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருக்காக உற்சாகமாக இருந்தோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடந்தது போலவே இங்கேயும் நடந்துள்ளது. நாங்கள் எங்களது தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தோல்வியில் நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். இந்த முறை அதையெல்லாம் மாற்றி சிறப்பாக செயல்படுவது குறித்து நாங்கள் பேசிக் கொண்டோம்.

ஆனால் நாங்கள் நினைத்தபடி எங்களால் செயல்பட முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அதற்கு வேறொரு வகையில் உடல் தகுதி சிறப்பாக தேவைப்படுகிறது. ஆனால், இந்த தொடரில் எங்களுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் என்ன நடந்ததோ அதுவேதான் இங்கும் நடந்திருக்கிறது. முதல் டெஸ்டில் நாங்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்களை விளையாடினோம், அதற்குக் காரணம், மூன்று பேரால் சமாளிக்கும் அளவுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் அதனை நாங்கள் இந்த போட்டியில் செய்யாதது பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் இந்த டெஸ்ட் போட்டியில் கூட 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்ளுடன் சென்றதற்கு பதிலாக நாங்கள் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் என்பது ஒரு நல்ல ஸ்கோராக இருந்தது. ஆனால் லிட்டன் தாஸைப் போல் நானும் சைம் அயூப்பும் இணைந்து கூடுதல் ரன்களை எடுத்திருக்க வேண்டும்.

Also Read: Funding To Save Test Cricket

அதனால் நாங்கள் இத்தோல்வியில் இருந்து மீள்வதுடன் எங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் அதற்கான உடற்தகுதியைப் பெற வேண்டும், நேர்த்தியாகவும், சிறப்பாகவும் தயாராக வேண்டும். இது ஒரு நீண்ட டெஸ்ட் மற்றும் உள்நாட்டு பருவமாக இருக்கும், அதனால் நாங்கள் இங்கிலாந்து எதிரான தொடருக்காக சிறப்பாக தயாராக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை