PAK vs ENG, 1st Test: நாங்களும் சலித்தவர்கள் கிடையாது; பாகிஸ்தான் பேட்டர்கள் பதிலடி!
பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்டர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்தான் விளையாடினார்கள். இதனால் இங்கிலாந்து அணி முதல் 14 ஓவர்களில் 100 ரன்களை கடந்து வரலாறு படைத்தது. முதல் மூன்று பேட்டர்கள் ஜாக் கிரௌலி 122, டக்கர் 107, ஒல்லி போப் 108 ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.
இதனைத் தொடர்ந்து ரூட் 23 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பிய நிலையில், ஹேரி ப்ரூக் 153, வில் ஜாக் 30, ஒல்லி ராபின்சன் 37 ஆகியோரும் தங்களது பங்கிற்கு ரன்களை குவித்ததால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 657/10 ரன்களை குவித்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவர்களை மட்டும்தான் சந்தித்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஸ்பின்னர் ஜகித் முகமது 33 ஓவர்களில் 235/4 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம், டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அப்துல்லா சபிக் 89, இமாம் உல் ஹக் 90 ஆகியோர் அபாரமாக விளையாடி வருகிறார்கள். தற்போது இரண்டாவது நாள் முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் அணி 181/0 ரன்களை சேர்த்துள்ளது. ராவல்பிண்டி பிட்சில் பந்துவீச்சாளர்கள் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி மூன்றாவது, நான்காவது நாள் முழுவதும் கூட பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகமிக அதிகம்.