தென் ஆப்பிரிக்கா 404 ரன்களில் ஆல் அவுட்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் பாகிஸ்தான்!

Updated: Wed, Oct 22 2025 19:49 IST
Image Source: Google

பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 87 ரன்களையும், சௌத் ஷகீல் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்திய கேசவ் மஹாராஜ் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரியான் ரிக்கெல்டன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஐடன் மார்க்ரமும் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டோனி டி ஸோர்ஸி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்ததுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

பின் 55 ரன்களை எடுத்த நிலையில் ஸோர்ஸி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டெவால்ட் பிரேவிஸும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்தது. இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 10 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் கைல் வெர்ரைன் மேற்கொண்டு ரன்கள் ஏதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழக்க, 76 ரன்களில் டிரிஸ்டன் ஸ்டப்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் களமிறங்கிய சேனுரன் முத்துசாமி ஒருபக்கம் அபாரமாக விளையாட, அறுமுனையில் களமிறங்கிய ஹர்மர் 2 ரன்னிலும், மார்கோ ஜான்சன் 12 ரன்னிலும், கேசவ் மஹாராஜ் 30 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் முத்துசாமியுடன் இணைந்த காகிசோ ரபாடா அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர். பின்னர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்த நிலையில் காகிசோ ரபாடா தனது விக்கெட்டை இழந்தார்.

அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சேனுரன் முத்துசாமி 89 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஆசிஃப் அஃப்ரிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 71 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் இமாம் உல் ஹக், அப்துல்லா ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத், சௌத் ஷகீல் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் ஜோடி சேர்ந்துள்ள பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பாபர் ஆசாம் 49 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் சிமோன் ஹார்மர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 23 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை