பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Updated: Tue, Aug 27 2024 09:59 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது. 

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்களும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 565 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியானது 146 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டானது.

இதன் காரணமாக வங்கதேச அணிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 6.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது இந்த தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியின் போது இரு அணி வீரர்களும் குறிப்பிட்ட நேரத்தை காட்டிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது.அதன்படி, பாகிஸ்தான் அணி 6 ஓவர்கள் தாமதமாக வீசியதன் காரணமாக அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் 6 புள்ளிகளை குறைப்பதுடன், போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதேசமயம் வங்கதேச அணியும் 3 ஓவர்கள் தாமதமாக பந்துவீசிய காரணத்தினால் 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் உள்பட போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசியின் இந்த நடவடிக்கையின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6 இடத்தில் இருந்த வங்கதேச அணி தற்போது ஏழாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு இப்போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷாகிப் அல் ஹசன், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் மீது பந்தை எறிந்ததன் காரணமாக, அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும், அத்துடன் ஒரு கருப்பு புள்ளியும் அவருக்கு வழங்குவதாகவும் ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை