மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீரர் குல் ஃபெரோசா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த முனீபா அலி மற்றும் சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் முனிபா அலி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் அமீனுடன் இணைந்த அலியா ரியாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் தங்களுடைய அரைசதத்தை பூர்த்தி செய்த நிலையில் சித்ரா அமீன் 51 ரன்களிலும், அலியா ரியாஸ் 52 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் ஜேன் மாகுயர் 3 விக்கெட்டுகளையும், அர்லீன் கெல்லி, காரா முர்ரே தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை சாரா ஃபோர்ப்ஸ் 9 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த கேப்டன் கேபி லூயிஸ் - ஏமி ஹண்டர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் இருவரும் தலா 44 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

அதன்பின் களமிறங்கிய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஒருபக்கம் ரன்களைச் சேர்க்க மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 179 ரன்களில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் டியான பைக் 4 விக்கெட்டுகளையும், நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News