ஐக்கிய நாடுகளில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டியில் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. முன்னதாக நவீன கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரின் உதவியால் கிடைக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் முக்கிய அணிகளுக்கு எதிராக முதல் தர அணியையும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக இளம் வீரர்களுடன் கூடிய 2ஆவது தர அணியையும் களமிறக்கி இந்தியா வெற்றி கண்டு வருவதை அனைவரும் அறிவோம்.

Advertisement

அந்த நிலையில் ஏற்கனவே ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று மார்தட்டி வரும் பாகிஸ்தான் அதை சோதித்துப் பார்க்கும் வகையில் இந்த தொடரில் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தான் என்ன செய்து விடப் போகிறது என்ற மேலோட்டமான எண்ணத்துடன் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்து 2023 பிஎஸ்எல் தொடரில் அசத்திய இளம் வீரர்களை களமிறக்கியது.

Advertisement

ஆனால் ஏற்கனவே கடந்த ஆசிய கோப்பையில் சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தங்களை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் கொடுத்த தோல்வியை மறக்காமல் வைத்திருந்த ஆஃப்கானிஸ்தான் இம்முறை அதே மைதானத்தில் முதல் போட்டியில் 93 ரன்களுக்கு சுருட்டி வென்று தக்க பதிலடி கொடுத்தது. அத்துடன் 4 ஒருநாள் மட்டும் 3 டி20 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்த ஆஃப்கானிஸ்தான் நேற்று நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் அந்த அணியை 130 ரன்களுக்கு கட்டுப்படுத்தி பின்னர் 7 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு கிரிக்கெட் தொடரை வென்று ஆஃப்கானிஸ்தான் வரலாறு படைத்துள்ளது. மறுபுறம் பிஎஸ்எல் தொடரில் உடல் பருமனாக இருந்தாலும் அதிரடி காட்டிய அசாம், 36 பந்தில் சதமடித்த சாதனை படைத்த சாய்ம் ஆயுப், தாஹிர் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் இத்தொடரில் மோசமாக செயல்பட்டு தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தனர். அதனால் இதுதான் ஐபிஎல் தொடரை விட சிறந்த தொடர் என்று நீங்கள் மார்தட்டும் பிஎஸ்எல் தொடரின் திறமையா? என பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

அதை விட கடைசியாக பாகிஸ்தானுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் ஆக்லாந்து மற்றும் ஹாமில்டன் மைதானங்களில் களமிறங்கிய தன்னுடைய கடைசி 2 போட்டியில் விளையாடிய அந்நாட்டு வீரர் அப்துல்லா ஷஃபிக் 0 (2), 0 (2) என அடுத்தடுத்து டக் அவுட்டாகியிருந்தார். இருப்பினும் உள்ளூர் தொடரில் கடுமையாக போராடி வந்த அவர் 2023 பிஎஸ்எல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்த தொடரில் தேர்வானார். ஆனால் 2 வருடங்கள் கழித்து எந்த முன்னேற்றத்தையும் காணாத அவர் இத்தொடரின் முதல் போட்டியில் 0 (2), 2ஆவது போட்டியில் கோல்டன் டக் அவுட்டானார்.

மொத்தத்தில் தன்னுடைய கடைசி 4 போட்டிகளில் 0 (2), 0 (2), 0 (2), 0 (1) என தொடர்ச்சியாக 4 முறை அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 4 தொடர்ச்சியான போட்டிகளில் டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சர்வதேச டி20 போட்டிகளில் வேறு எந்த வீரரும் தொடர்ந்து 3 போட்டிகளுக்கு மேல் டக் அவுட்டானதில்லை.

Advertisement

அதனால் அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டாவது தான் பிஎஸ்எல் திறமையா? என்று அதற்காக தனியாக பாகிஸ்தானை ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். முன்னதாக சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரில் 3 போட்டிகளில் இந்திய வீரர் சூர்யகுமார் கோல்டன் டக் அவுட்டானதை பாகிஸ்தான் ரசிகர்கள் கலாய்த்தனர். ஆனால் அது கூட ஒருநாள் தொடர் என்ற நிலையில் அதிரடியாக விளையாட வேண்டிய டி20 கிரிக்கெட்டில் அவரையும் மிஞ்சி இவர் 4 டக் அவுட்டானாதால் தற்போது பாகிஸ்தானை இந்திய ரசிர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News