ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட குஷ்தீல் ஷா - விளக்கமளித்த பிசிபி!
பாகிஸ்தான் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனையடுத்து நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில், இப்போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் குஷ்தீல் ஷா ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டி முடிந்து பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, சில ரசிகர்கள் வீரர்கள் குறித்து தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்ட குஷ்தில் ஷா தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். மற்ற வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரும் குஷ்தீல் ஷாவை தடுக்க முயன்ற நிலையிலும், அவர் ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதன்பின் பாதுகாப்பு அதிகாரிகள் ரசிகரையும் குஷ்தீல் ஷாவையும் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் ரசிகர்களுடன் பாகிஸ்தான் அணி வீரர்கள் மோதலில் ஈடுபட்ட காணொளியானது இணையத்தில் வைரலானது. மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரும் ரசிகருடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த சமபவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேசிய வீரர்களை நோக்கி இழிவான வார்த்தைகளால் பேசப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களைக் கேட்ட பிறகு குஷ்தில் ஷா தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், ஆனால் ரசிகர்களின் மோசமான மற்றும் தகாத வார்த்தைகளின் காரணமாக இந்த நிலைமை எல்லை மீறியது” என்று கூறியுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இதுகுறித்து பேசிய குஷ்தில் ஷா, “அவர்கள் வீரர்களையும் அணியையும் விமர்சித்தார்கள், ஆனால் அவர்கள் என் நாடு குறித்து அவதூறாக பேச தொடங்கியபோது, நான் கோபமடைந்து அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டேன். ஆனாலும் அவர் நிறுத்தவில்லை. அதன் பிறகுதான், நான் அவருடன் மோதலில் ஈடுபட்டேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.