தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது - எம் எஸ் தோனி!

Updated: Tue, May 21 2024 16:36 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் இத்தொடரில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்து ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.  முன்னதாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 13 சீசன்கள் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி, அதில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.

இந்நிலையில் தற்சமயம் 42 வயதை எட்டியுள்ள தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது, இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேப்டன் பதவியை வழங்கி இருந்தார். இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடருடன் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்ற தகவல்களும் வெளியாகினர். ஆனால் கடந்த ஆண்டே தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தோனி கூறியிருந்த நிலையில், இந்த சீசனில் அது நடக்கவில்லை. ஒருவேளை இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தால் நிச்சயம் தோனி ஓய்வை அறிவித்திருப்பார்.

அனால் தற்போது அது நடைபெறாத நிலையில், மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிப்பாரா அல்லது மேலும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிவருதால் தான் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரின் விளையாடுவதில் கடினமான விஷயம் என்னவென்றால். நான் ஆண்டு முழுவதும் எந்த கிரிக்கெட்டையும் விளையாடுவதில்லை. அதன் காரணமாக நான் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும் இங்கு நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டி உள்ளது. தொழில்முறை கிரிக்கெட் அவ்வளவு எளிதானது கிடையாது. ஏனெனில் இங்கு உங்களது வயதை கணக்கில் கொண்டு உங்களுக்கு எந்தவொரு சலுகையையும் வழங்க மாட்டார்கள்.

நீங்கள் விளையாட வேண்டுமென்றால் உங்களுடன் விளையாடும் மற்ற வீரர்களை போல நீங்களும் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.  ஆனால் உங்களுடைய வயது அதற்கு பெரும் தடையாக இருக்கும். அதனால் உங்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், கொஞ்சம் பயிற்சி என சில விஷயங்களும் இதில் அடங்கியுள்ளன. நல்ல வேளையாக நான் அதிகம் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடாதது என்னுடய அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். ஏனெனில் எனக்கு அதனால் எந்த கவனச்சிதறலும் ஏற்படுவதில்லை. நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தவுடன், எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்பினேன்.

ஆனால், அதே நேரத்தில், மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க விவசாயம், தனக்கு பிடித்த வாகனங்களில் பயணிப்பது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினேன். இந்த விஷயங்கள் எனக்கு மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றனர். ஏனெனில் எனக்கு மன அழுத்தமாக இருந்தால், நான் உடனடியாக எனது கேரேஜுக்குச் சென்று, ஓரிரு மணிநேரம் அங்கேயே செலவழித்தால் நான் நன்றாக இருப்பதாக உணர்வேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை