ரஞ்சி கோப்பை: இறுதிப்போட்டிக்கு பெங்கால், சௌராஷ்டிரா அணிகள் முன்னேற்றம்!

Updated: Sun, Feb 12 2023 22:59 IST
Ranji Trophy 2022-23: Vasavada Guides Saurashtra To Final With 4-wicket Win Over Karnataka (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பெங்கால் அணி 438 ரன்னும், மத்தியபிரதேச அணி 170 ரன்னும் எடுத்தன. 268 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3ஆவது நாளில் 2 விக்கெட்டுக்கு 59 ரன்கள் எடுத்து இருந்தது. சுதீப் குமார் கராமி 12 ரன்னுடனும், அனுஸ்டப் மஜூம்தார் 9 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

4ஆவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 9 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்து 547 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதிகபட்சமாக அனுஸ்டப் மஜூம்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிரதிப்தா பிராம்னிக் 60 ரன்னுடன் களத்தில் உள்ளார். மத்தியபிரதேசம் தரப்பில் சரன்ஷ் ஜெயின் 6 விக்கெட்டும், குமார் காத்திகேயா 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதையடுத்து இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மத்திய பிரதேச அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டத்தொடங்கியது. இதில் ராஜத் படிதார் அரைசதம் கடக்க, மற்றவீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 39.5 ஓவர்களில் மத்திய பிரதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பெங்கால் அணி தரப்பில் பிரதீப்தா பிரமாணிக் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் பெங்கால் அணி 306 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதேபோல், கர்நாடகா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் முதலில் விளையாடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 3ஆவது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் அர்பித் வசவதா 112 ரன்னுடனும், சிராக் ஜானி 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 527 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அர்பித் வசவதா 202 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. கேப்டன் மயங்க் அகர்வால் 55 ரன்னில் அவுட் ஆனார். நிகின் ஜோஸ் 54 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கர்நாடக அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சௌராஷ்டிரா அணி தரப்பில் சேத்தன் சகாரியா, டிஏ ஜடேஜா தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சௌராஷ்டிரா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் கேப்டன் அர்பித் வசவதா 47 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடக அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை