இந்தியாவின் பாரம்பரிய மிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் 23, அபரஜித் 8, இந்திரஜித் 9 ஆகியோர் சொதப்ப, மிடில் ஆர்டரில் பிரதோஷ் பால் மட்டுமே  அரைசதம் அடித்தார். பிரதோஷ் பால் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் வெறும் 144 ரன்களுக்கு தமிழ்நாடு அணி ஆல் அவுட்டானது.

Advertisement

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணி வீரர் சர்ஃபராஸ் கான் அபாரமாக விளையாடி சதமடித்தார். மிகச்சிறப்பாக விளையாடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய சர்ஃபராஸ் கான் 162 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் தனுஷ் கோட்டியான் 71 ரன்களும், மோஹித் அவஸ்தி 69 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 481 ரன்களை குவித்தது.

அதன்பின் 337 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் தோல்வியடைவதற்கான அபாயம் இருந்தது. ஒருவேளை இன்னிங்ஸ் தோல்வியடையவில்லை என்றாலும், 337 ரன்கள் பின் தங்கியிருந்ததால் தோல்விக்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் 2ஆவது இன்னிங்ஸை தமிழ்நாடு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 68 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் இந்திரஜித், பிரதோஷ் பால், விஜய் சங்கர் ஆகிய மூவரும் அபாரமாக விளையாடி சதமடித்தார்கள். இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் இருவரும் தலா 103 ரன்கள் அடித்தனர். பிரதோஷ் பால் 169 ரன்களை குவிக்க, 2ஆவது இன்னிங்ஸில் 548 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி. 

இதனால் தமிழ்நாடு அணி 211 ரன்கள் முன்னிலை பெற, 212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கடைசி நாள் ஆட்டத்தில் 24 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆடமுடிந்ததால் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் அடிக்க, இந்த போட்டி டிராவில் முடிந்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News