ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் இன்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு முகமது அலி மற்றும் ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் ஜெகதீசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 40 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அலி ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 63 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசனும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால், விஜய் சங்கர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Advertisement

அதன்பின் இணைந்த பாபா இந்திரஜித் - ஆண்ட்ரே சித்தார்த் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜித் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே சித்தார்த் சதமடித்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய பூபதி குமார், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்த நிலையில், ஆண்ட்ரே சித்தார்த் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய முகமது மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி முதல்நாள் 89.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் இப்போட்டியின் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News