ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!

Updated: Sat, Jan 25 2025 21:19 IST
Image Source: Google

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் நேற்று (ஜனவரி 23)முதல் தொடங்கியது. இதில் எலைட் குரூப் டி பிரிக்காவுக்கான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆண்ட்ரே சித்தார்த்தின் அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஆண்ட்ரே சித்தார்த் 106 ரன்களையும், ஜெகதீசன் 63 ரன்களையும் சேர்த்தனர். சண்டிகர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய விஷு காஷ்யப் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சண்டிகர் அணியில் தொடக்க வீரர் ஷிவம் பாம்ப்ரி பொறுப்புடன் விளையாடி சதமடித்து அசத்தினார். 

ஆனால் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி 74.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் அஜித் ராம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த தமிழ்நாடு அணியில் முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜெகதீசன் 10 ரன்களுடனும், அஜித் ராம் ஒரு ரன்னுடனும் தொடர்ந்தனர். இதில் அஜித் ராம் 7 ரன்னிலும், இந்திரஜித் 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜெகதீசனுடன் இணைந்த விஜய் சங்கர் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 89 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய விஜய் சங்கர் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் தமிழ்நாடு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஜய் சங்கர் 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 150 ரன்களையும், ஆண்ட்ரே சித்தார்த் 36 ரன்களையும் சேர்த்திருந்தனர். சண்டிகர் தரப்பில் ஜக்ஜித் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தமிழ்நாடு அணி சண்டிகர் அணிக்கு 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணியில் துஷார் ஜோஷி ரன்கள் ஏதுமின்றியும், குனல் மஹாஜன் 7 ரன்னிலும், ஷிவம் பாம்ப்ரி 16 ரன்னிலும், அங்கித் கௌசிக் 37 ரன்னிலும், பிர்லா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சண்டிகர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. இதில் கேப்டன் மனன் வோரா 47 ரன்களுடன் களத்தில் உள்ளார். தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சண்டிகர் அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை