ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி!

Updated: Sat, Feb 17 2024 17:49 IST
ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி! (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற எலைட் குரூப் சி பிரிவு அணிகளுக்கு இடையேயான போட்டியில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேலம் கிரிக்கெட் மைத்தானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணி பாபா இந்திரஜித் - விஜய் சங்கர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித் 122 ரன்களுடனும், விஜய் சங்கர் 85 ரன்களுடனும் தொடர்ந்தனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய் விஜய் சங்கரும் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். மேலும் இருவரும் இணைந்து 281 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 130 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மோஹித் ஹரிஹரன், முகமது, சாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

அதேசமயம் மறுபக்கம் இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 187 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் தமிழ்நாடு அணி முதல் இன்னிக்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 435 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுக்விந்தர் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரான் சிங் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், பிரப்சிம்ரன் சிங் 24 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அன்மொல்ப்ரீத் சிங் - நெஹால் வதேரா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தி உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்மோல்ப்ரீத் சிங் 41 ரன்களிலும், நெஹால் வதேரா 43 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 294 ரன்கள் பின் தங்கிய நிலையில் பஞ்சாப் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை