ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை!

Updated: Thu, Mar 14 2024 14:06 IST
ரஞ்சி கோப்பை 2024: விதர்பாவை வீழ்த்தி 42ஆவது முறையாக பட்டத்தை வென்றது மும்பை! (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் விதர்பா அணிகள் முன்னேறின. அதன்படி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் முதல் இன்னிங்ஸில் 224 ரன்களிலும், பின்னர் களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களிலும் ஆல் அவுட்டானது.  இதன்மூலம் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் முஷீர் கான், கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் முஷீர் கான் 136 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 96 ரன்களையும், கேப்டன் அஜிங்கியா ரஹானே 73 ரன்களையும் சேர்க்க மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் ஹர்ஷ் தூபே 5 விக்கெட்டுகளையும், யஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் விதர்பா அணி வெற்றிக்கு 538 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை துரத்திய விதர்பா அணிக்கு அதர்வா டைடே - துருவ் ஷொரே இணை நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் அதர்வா 32 ரன்களிலும், துருவ் 28 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த அமன் - கருண் நாயர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் கருண் நாயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அமன் 32 ரன்களுக்கும், யாஷ் ரத்தோட் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்ட்களை இழந்தனர். அதன்பின் கருண் நாயருடன் இணைந்த அக்ஷய் வாத்கர் இணை பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின் 74 ரன்கள் எடுத்த நிலையில் கருண் நாயரும் தனது விக்கெட்டை இழந்தார். ஆனாலும் சிறப்பாக விளையாடிவரும் கேப்டன் அக்ஷய் வாத்கர் அரைசதம் கடந்தார். 

இதையடுத்து 290 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்றை நான்காம் நாள் ஆட்டத்தை வித்ர்பா அணியின் அக்ஷய் 56 ரன்களுடனும், ஹர்ஷ் தூபே 11 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்த விதர்பா அணியும் வெற்றியை நோக்கி நகர்ந்தது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அக்ஷய் சதமடித்து அசத்த, அவருக்கு துணையாக ஹர்ஷ் தூபேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் விதர்பா அணி வெற்றிபெறும் என எதிர்பார்த்த நிலையில் 102 ரன்கள் எடுத்திருந்த அக்ஷய் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 65 ரன்கள் எடுத்திருந்த ஹர்ஷ் தூபேவும் தனது விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் விதர்பா அணி 368 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மும்பை அணி தரப்பில் தனுஷ் கோட்யான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 42ஆவது முறையாக ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை