ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா!

Updated: Tue, Feb 27 2024 14:59 IST
ரஞ்சி கோப்பை 2024: கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது விதர்பா! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்றுவரும் நடபாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்று வந்த முதலாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகாக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய விதர்பா அணியானது அதர்வா டைடே மற்றும் கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 460 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதர்வா டைடே 109 ரன்களையும், கருண் நாயர் 90 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணியில் சமர்த் 59, நிகின் ஜோஸ் 82 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 286 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதன்மூலம், 174 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக துருவ் ஷரே 57 ரன்களையும், கருண் நாயர் 34 ரன்களையும் சேர்த்தனர். கர்நாடகா அணி தரப்பில் வித்வாத் கவரெப்பா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளையும், விஜயகுமார் வைஷக் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனால் கர்நாடகா அணிக்கு 370 ரன்கள் என்ற கடின இலக்கை விதர்பா அணி நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகா அணிக்கு ரவிக்குமர் சமர்த் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் சமர்த் 40 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மயங்க் அகர்வால் அரைசதம் கடந்து அசத்தினார். 

அதன்பின் 70 ரன்களைச் சேர்த்த மயங்க் அகர்வாலும் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 40 ரன்களை எடுத்திருந்த அனீஷும் ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கர்நாடகா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா அணி தரப்பில் ஆதித்யா சர்வதே, ஹர்ஷ் தூபே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் விதர்பா அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தி நடப்பு சீசன் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து, மார்ச் 02ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மத்திய பிரதேஷ அணியை எதிர்த்து விதர்பா அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை