ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜாம்ஷெட்பூரில் உள்ள கீனன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஷரந்தீப் சிங் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் விராட் சிங் 40 ரன்களையும், அன்குல் ராய் 46 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து, அணியின் கேப்டன் இஷான் கிஷான், குமார் குஷாக்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் ஷாய் கிஷோர், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் 17 ரன்களுக்கும், முகமது அலி 37 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீரர்களில் முகமது 24 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 27.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜார்கண்ட் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய உத்கர்ஷ் சிங் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் 79 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ஜார்கண்ட் குமார் சுரஜ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மனிஷி 12 ரன்களுக்கும், கேப்டன் இஷான் கிஷான் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் உத்கர்ஷ் சிங் 35 ரன்களையும், விராட் சிங் 29 ரன்களையும், குமார் குஷாக்ரா 20 ரன்களுக்கும், ஆதித்யா சிங் 35 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க ஜார்கண்ட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளையும், அஜித் ராம் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்மூலம் தமிழ்நாடு அணிக்கு 234 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணியில் முகமது அலி ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஜெகதீசன் 13 ரன்களுக்கும், அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 13 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது அலியும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தமிழ்நாடு அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை விஜய் சங்கர் 33 ரன்களுடனும், அஜித் ராம் 5 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் விஜய் சங்கர் மற்றும் அஜித் ராம் ஆகியோர் மேற்கொண்டு ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் முகமது 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தமிழ்நாடு அணி 189 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஜார்கண்ட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.